புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடம்


புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடம்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 28 Jun 2023 6:23 AM GMT)

வலங்கைமான் அருகே புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

புதர் மண்டி கிடக்கிறது

வலங்கைமானை அடுத்த மூளால்வாஞ்சேரி ஊராட்சியில் சாலபோகம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை 100-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. சுகாதார வளாகத்துக்குள் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இதனால் இந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதர்மண்டி கிடப்பதால் சுகாதார வளாகம் இருப்பதே தெரியாத அளவு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர் மண்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை இடித்து அகற்றி விட்டு அங்கு புதிதாக மின்மோட்டார் வசதியுடன் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story