கிருஷ்ணகிரியில்360 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா


தினத்தந்தி 24 April 2023 7:00 PM GMT (Updated: 24 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த எருதுவிடும் விழாவில் 360-க்கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின.

எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து 14-வது ஆண்டு எருதுவிடும் விழாவை நேற்று நடத்தினர். விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், சேலம், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோர கிராமங்களில் இருந்து 360-க்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் வாகனத்தில் அழைத்து வந்தனர். இதையடுத்து கோ-பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக பர்கூர் தி.மு.க எம்.எல்.ஏ. மதியழகன் கொடியசைத்து எருதுவிடும் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளைகளையும் நிர்யணம் செய்த குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வினாடிகளில் கடக்கிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கீடு செய்யப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு

முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறையினர் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். வருவாய்த்துறை, போலீசார் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் 2 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தன. தடுப்புகளுக்கு இடையே காளைகள் ஓடவிடப்பட்டன. விழாவில் முதல் பரிசாக ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 33-ம், 2-ம் பரிசாக ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 222-ம், 3-வது பரிசாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 111 என மொத்தம் 53 ரொக்க பரிசுகள் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. விழா நடைபெற்ற பழையபேட்டை நேதாஜி சாலையில் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story