புகழூர் தாசில்தார் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்


புகழூர் தாசில்தார் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
x

புகழூர் தாசில்தார் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என்.புகழூர் ஆகிய ஊராட்சிகளும், காகிதஆலை, புன்செய் புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகளும் மண்மங்கலம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டபோது அதனுடன் இருந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகழூர் சுற்று வட்டார பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் புகழூரை தலைமை இடமாகக் கொண்டு புகழூர் தாலுகா உருவாக்கப்பட்டது. இந்த புகழூர் தாலுகாவில் புகழூர், பரமத்தி, தென்னிலை ஆகிய மூன்று வருவாய் குறு வட்டத்தில் 26 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது.

புகழூர் தாசில்தார் அலுவலகம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அதற்கான புதிய கட்டிடம் வேலாயுதம்பாளையம் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஓராண்டுகளாக புகழூர் தாசில்தார் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஜூலை 2-ந்தேதி கரூருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், பணி முடிவுற்ற கட்டிடங்களையும் திறந்து வைத்தார். அதில் புகழூர் தாசில்தார் அலுவலகமும் ஒன்று. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் செயல்பட்டு வந்த புகழூர் தாசில்தார் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது புதிய அலுவலக கட்டிடத்தில் செயல்பட தொடங்கி உள்ளது.


Next Story