அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி


அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்

விழுப்புரம்

விழுப்புரம்

மயானக்கொள்ளை

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்ரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு 10-ம் ஆண்டாக மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் கரகம் ஜோடித்தல், அக்னி கரகம் குளக்கரையில் இருந்து வீதியுலா புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 3 மணியளவில் வழுதரெட்டி மயானத்தில் அங்காள பரமேஸ்வரியம்மனுக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

இதையொட்டி கத்தி, சூலம், கபாலம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்தியவாறு 18 கரங்களுடன் மயான காளியாய் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் சிலர், அங்காளம்மன், காளி, காத்தவராயன், பாவாடைராயன், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு வந்து அங்கு படையலிட்டு தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களை அம்மன் மீது வீசி கொள்ளையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் வழுதரெட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் வழுதரெட்டி பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story