பேருந்து மோதியதில் வழிகாட்டி பலகை விழுந்த விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு


பேருந்து மோதியதில் வழிகாட்டி பலகை விழுந்த விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவிப்பு
x

ஆலந்தூர் அருகே வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல் அமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை, ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேற்று (7-8-2022), பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று, G.S.T. சாலையில் ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாகச் செல்லும்போது, சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி அப்பலகை சாலையில் சாய்ந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முக சுந்தரம் (வயது 28) என்பவர் பலத்த காயமுற்று, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில். இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதோடு, போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 இலட்சம் ரூபாயும், முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாயும், ஆகமொத்தம் மூன்று இலட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதல் அமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story