லாரி, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; வியாபாரி பலி


லாரி, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; வியாபாரி பலி
x

புதுக்கோட்டை அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வியாபாரி பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

பள்ளத்தில் கவிழ்ந்தது

சென்னையில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வழியாக காரைக்குடி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 17 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், திருமயம் அருகே முன்னால் சென்ற லாரியை பஸ் முந்தி செல்ல முயன்ற போது, திடீரென லாரி திருமயம் நகருக்குள் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் லாரி மீது மோதி அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியும், பஸ்சும் பள்ளத்தில் கவிழ்ந்தன.

வியாபாரி பலி

மோட்டார் சைக்கிளில் வந்த துணி வியாபாரியான காரைக்குடி பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 44) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

இதில் பஸ்சில் பயணம் செய்த பிரிட்டோ (24), சாந்தி (51), விக்னேஷ் (31), ஞானபிரமிளா (25), மரியராஜ ரத்தினம் (60) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story