சீர்காழியில், பஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்படும் பஸ்கள்


சீர்காழியில், பஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்படும் பஸ்கள்
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:46 PM GMT)

சாலை அடைக்கப்பட்டதால் சீர்காழியில் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சாலை அடைக்கப்பட்டதால் சீர்காழியில் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

புதிய பஸ் நிலையம்

சிதம்பரம்- மயிலாடுதுறை பிரதான நெடுஞ்சாலையில் சீர்காழி புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும், சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, சென்னை, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, நாகை, காரைக்கால், வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதி சாலை சேதம் அடைந்து இருந்தது. இதையடுத்து சாலையை சீரமைக்க கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். அதன்படி சாலையை சீரமைக்கும் பணி நடந்தது.

அடைப்பு

இதற்காக பஸ் நிலையத்தின் ஒரு பகுதி சாலை அடைக்கப்பட்டது. சாலை பணிகள் நிறைவடைந்து 5 நாட்களாகியும் அடைக்கப்பட்ட பகுதி திறந்து விடப்படவில்லை. இதனால் பஸ்கள் பஸ் நிலையத்துக்கு உள்ளே வராமல் பிரதான சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வருகின்றன. பள்ளி நேரங்களில் பிரதான சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பஸ்கள் அங்கு நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பஸ் நிலையத்தில் அடைக்கப்பட்ட சாலையை திறந்து விட்டு, பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story