பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை காப்பாற்ற சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தல்


பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை காப்பாற்ற சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Dec 2022 6:44 PM GMT (Updated: 24 Dec 2022 7:07 PM GMT)

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை காப்பாற்ற சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க கலந்தாய்வு கூட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி சுந்தர்ராஜன், குணசேகரன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் நடேசன், பொது செயலாளர் ராஜன், பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் நோக்கம், சங்கத்தை எவ்வாறு வழிநடத்த வேண்டும், சங்க உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத்தருவது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

மேலும் சங்கத்தின் மாவட்ட தலைவராக நாகராஜனும், செயலாளராக வேல்முருகனும், பொருளாளராக முருகேசனும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், மருத்துவ சமுதாயத்தை பழங்குடி இனப்பிரிவில் சேர்க்க வேண்டும். அல்லது தனி உள் ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவ சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்ற சட்டத்தை கடுமையாக்க வேண்டும். கிராமப்புறங்களில் சமுதாய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். முடி திருத்தும் தொழிலாளர் நல வாரியத்திற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.


Next Story