மணலி அருகே ரூ.19 கோடியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட கால்வாய் மேம்பாலப் பணி


மணலி அருகே ரூ.19 கோடியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட கால்வாய் மேம்பாலப் பணி
x

மணலி அருகே ரூ.19 கோடியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கால்வாய் மேம்பாலப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

சென்னை

குடியிருப்புகளை சூழ்ந்தது

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் உள்ள 16-வது வார்டுக்கு உட்பட்ட சடையங்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1,500 பேர் வசித்து வருகின்றனர். வடக்கே கொசஸ்தலை ஆற்றின் உபரிக்கால்வாய், தெற்கே புழல் உபரி கால்வாய், கிழக்கே பக்கிங்காம் கால்வாய், ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி என நீர் நிலைகள் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், பெரு மழையின் போது, புழல் ஏரியில் மழைநீர் நிரம்பி மதகு திறக்கப்பட்டு அங்கிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக ஆமுல்லை வாயல், கொசப்பூர் சடையங்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூரில் உள்ள முகத்துவார ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு கால்வாய் வழியாக பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள பர்மா நகர், இருளர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. இதனால் வெள்ளப்பாதிப்பால் அங்குள்ள மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பது வழக்கம். பின்பு பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவியுடன் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

கிடப்பில் போடப்பட்ட பணி

இவ்வாறு மழைக்காலத்தில் 50 ஆண்டுகளாக சடையங்குப்பம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 2008-ம் ஆண்டு பர்மா நகர், இருளர் காலனி அருகே அன்றைய திட்ட மதிப்பீட்டின்படி ரூ.19 கோடி செலவில் கால்வாய் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடந்து பணிகள் தற்போது வரை முடிவடையாமல் உள்ளது. இதனால் பர்மா நகர் இருளர் காலனியில் வசிக்கும் மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், முதியவர்கள் ஆகியோர் பாலத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்த மேம்பாலப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் 15 ஆண்டு காலம் ஆகியும் இதுவரை இந்த கால்வாய் மேம்பால கட்டுமான பணி முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதோடு திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரித்துள்ளது. சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனி சேர்ந்த பொதுமக்கள் அவசரத்துக்கு திருவொற்றியூருக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டதால் கால்வாய் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் 15 ஆண்டுகள் ஆகியும் இந்த பணி முடிவடையவில்லை. மேம்பால கட்டுமான பணியில் அதிகாரிகள் சரியாக திட்டமிடாததும், செயல்முறையின்மை காரணமாக கட்டுமான பணிகள் நீண்ட நாள் இழுத்து கொண்டு செல்கிறது,

உடனடியாக இதில் அரசின் துறை சார்ந்த அமைச்சர், உயர் அதிகாரிகள் நேரிடையாக பார்வையிட்டு இருளர் சமுதாய மக்களுக்கு விடியலை தர வேண்டும் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story