நாமக்கல்: அடி பம்பை அகற்றாமல் கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து


நாமக்கல்: அடி பம்பை அகற்றாமல் கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து
x

அகற்றப்படாமல் இருந்த அடிப்பம்பு

நாமக்கல் அருகே அடி பம்பை அகற்றாமல் கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் சில தினங்களாக சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும்போது சாலையில் ஏற்கனவே சில ஆண்டுகளாக பயன்படாத நிலையில் இருந்து வந்த குடி நீர் அடி பம்பை அகற்றாமல் அப்படியே கான்கிரீட்டை ஒப்பந்ததாரர் போட்டுள்ளார். இது பற்றி அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளனர்.

ஒன்றிய குழு தலைவர் கே பி ஜெகநாதன் முன்னிலையில் அடிப்பம்பை அகற்றினர்

அதற்கு அவர் சரியான பதில் அளிக்காததால் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி. ஜெகநாதன், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வனிதா, பொறியாளர் நைனாமலை ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிறகு கான்கிரீட் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்த அடிப்பம்பை அகற்றி விட்டனர். கான்கிரீட் அமைக்கும் பணியை பட்டணம் மதியழகன் என்பவர் எடுத்து செய்து வந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் தெரிவித்தார்.


Next Story