ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் டெபாசிட்டுக்காக காலி மது பாட்டில்களை சேகரித்த வேட்பாளர்...!


ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் டெபாசிட்டுக்காக காலி மது பாட்டில்களை சேகரித்த வேட்பாளர்...!
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் டெபாசிட்டுக்காக காலி மது பாட்டில்களை வேட்பாளர் சேகத்து வருகிறார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் கூறும்போது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இதற்காக பாட்டில் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். தேர்தலில் போட்டியிட வைப்பு தொகை கட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையாக சென்று கடைக்கு வெளியே உள்ள காலி மதுபான பாட்டில்களை சேகரித்து வருகிறேன்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைக்கு கட்ட முடிவு செய்துள்ளேன். மேலும் மது குடிக்க வரும் மது பிரியர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன். தேர்தலில் வெற்றி பெற்றால் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிப்பதை தடுப்பேன்.

மேலும் மதுவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விதவைப் பெண்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்க சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஆறுமுகம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலி மது பாட்டில்களை சேகரித்து வருகிறார்.


Next Story