பள்ளி வேன் மீது கார் மோதல்; கிளீனர் பலி


பள்ளி வேன் மீது கார் மோதல்; கிளீனர் பலி
x

பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த அரசு சர்க்கரை ஆலையின் அலுவலர் படுகாயமடைந்தார்.

பெரம்பலூர்

சாலை அகலப்படுத்தும் பணி

பெரம்பலூர் முதல் திருச்சி துறையூர் வரை செல்லும் சாலை தற்போது அகலப்படுத்தி மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தற்போது அந்த சாலையோரங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை, உயர்கோபுர மின் விளக்குகள், மின் கம்பங்கள், பாதசாரிகளுக்கு நடைபாதை வசதி, இரும்பு கம்பியிலான தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளியின் வேன் ஒன்று நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவ-மாணவிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. வேன் டிரைவராக லாடபுரத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் (வயது 37) என்பவரும், காலனி தெருவை சேர்ந்த பச்சமுத்து (50) கிளீனராகவும் இருந்தனர்.

பள்ளி வேன் மீது கார் மோதல்

அப்போது எதிரே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் மோதி நிற்காமல் பள்ளி வேனின் இடது பக்கம் மோதி நின்றது. இதில், மின்கம்பம் முறிந்து சாய்ந்து விழுந்தது. அப்போது மாணவ-மாணவிகள் யாரும் வேனில் ஏறாததால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் கார் மோதிய வேகத்தில் வேனின் பேட்டரி தூக்கி அடித்ததில் கிளீனர் பச்சமுத்து படுகாயமடைந்தார்.

காரை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருப்புக்கோட்டை சாலையை சேர்ந்தவரும், கள்ளக்குறிச்சி அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு விரிவாக்க அலுவலருமான ரவிச்சந்திரன் (57) காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்தார்.

கிளீனர் பலி

இந்த விபத்து குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயமடைந்த பச்சமுத்துவை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும், ரவிச்சந்திரனை தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பச்சமுத்து பரிதாபமாக இறந்தார்.

ரவிச்சந்திரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story