கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்


கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி - 3 பேர் படுகாயம்
x

கல்பாக்கம் அருகே கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரைச்சாலையில் நேற்று அதிகாலையில் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி மீன்கள் ஏற்றிக்கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக இவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த நூரிஸ்வானா (வயது 49), கார் டிரைவர் சபீர்பாஷா (26) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த நூர்ஜரினா (52), பாத்திமா (72), நூர்ரிஹானா (45) ஆகிய 3 பெண்களுக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார், விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story