கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி
x

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் பலி

நாகப்பட்டினம்

நாகூர் அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதியதில் மாணவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அவரது நண்பரும் படுகாயமடைந்தார்.

கார் மீது மோட்டார்சைக்கிள் மோதல்

நாகை மாவட்டம் திருமருகல் கீழக்கரையிருப்பு காலனியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் விக்ரம் (வயது 17). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர், தனது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் புகழேந்தி (16) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒக்கூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரேவந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவர் சாவு

தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்ரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த புகழேந்தி நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சிவக்குமார் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story