கார்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் பலி


கார்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் பலி
x

கீரனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் வாலிபர் பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை

நண்பர்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை கீழவெளியூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் மகன் ஜீவா (வயது 27). இவரது நண்பர் சோமரசம்பேட்டை கீழ வயலூரை சேர்ந்த சுப்பையன் மகன் பார்த்திபன் (26). இவர்கள் 2 பேரும், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு காரில் வந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சிக்கு கீரனூர் அருகே ஒத்தக்கடை வழியாக திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை பார்த்திபன் ஓட்டினார்.

வாலிபர் பலி

அப்போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி திருச்சி அல்லூரை சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவர் ஓட்டி வந்த காரும், பார்த்திபன் ஓட்டி வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. பார்த்திபன் ஓட்டி வந்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 காரும் அப்பளம் போல் நொறுங்கியது. படுகாயமடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பார்த்திபன் படுகாயமடைந்தார். பிரேம்குமார் சீட் பெல்ட் அணிந்து இருந்ததாலும், அவரது காரில் பாதுகாப்புக்கான முன் பக்க பலூன் வெடித்ததால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடைேய ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story