வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை முயற்சி-கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை முயற்சி-கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

50 பவுன் நகை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி கொல்லமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் பிரியங்கா (வயது 27). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரகமத்காலனியை சேர்ந்த முனியப்பன் (56) மகன் நவீன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. என்ஜினீயரான நவீன், தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

திருமணத்தின் போது பிரியங்காவின் பெற்றோர், வரதட்சணையாக 50 பவுன் நகை, ரூ.1¼ லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. அதனை பெற்று கொண்ட மாப்பிள்ளை வீட்டார், கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளனர்.

தற்கொலை முயற்சி

மேலும் மாமனார் முனியப்பன், மாமியார் நாகரத்தினம் (53), நாத்தனார் பவித்ரா (22) ஆகியோர், வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடித்து, உதைத்ததாகவும், கெட்ட வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி பிரியங்காவின் தந்தை வேலு, அவரை மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றார். அப்போது, முனியப்பன், நாகரத்தினம், பவித்ரா ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டதுடன், உங்கள் பொண்ணை அழைத்தும் செல்லும் படி தெரிவித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

4 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து பிரியங்காவின் தந்தை வேலு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நவீன், முனியப்பன், நாகரத்தினம், பவித்ரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் நவீன், முனியப்பன், நாகரத்தினம், பவித்ரா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story