பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்கு

கோவை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதிகளை மீறியதாக பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
துடியலூர்
கோவை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் விதிகளை மீறியதாக பா.ஜனதா மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலம்
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் நேற்று முதல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, குளங்களில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கவுண்டம்பாளையம், உருமாண்டம்பாளையம் பெரியநாயக்கன்பாளையம், வடமதுரை, பன்னிமடை உள்பட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பூஜைக்கு பிறகு துடியலூர் பஸ் நிறுத்தத்துக்கு எடுத்து வரப்பட்டன.
அங்கிருந்து அனைத்து சிலைகளையும் ஊர்வலமாக வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள குட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, கரைக்கப்பட்டன.
5 பேர் மீது வழக்கு
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார், துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. பொறுப்பாளர் நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி துணைத்தலைவி வத்சலா, இளங்கோ, சாஜி, கிருஷ்ணா ஆகிய 5 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஊர்வலத்தின்போது, விநாயகர் சிலையை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.