4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை


4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை
x
தினத்தந்தி 29 Jan 2024 9:45 PM GMT (Updated: 29 Jan 2024 9:46 PM GMT)

ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமான சேவையை வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயக்க தொடங்குகிறது.

மீனம்பாக்கம்,

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் விமான சேவையை வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயக்க தொடங்குகிறது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும்.

அதேபோல, சென்னை-மொரீஷியஸ் இடையே 'ஏர் மொரீஷியஸ்' ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story