சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15-ந்தேதி தொடங்குகிறது


சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15-ந்தேதி தொடங்குகிறது
x

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி நடைபெற இருப்பதாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை,

மாநில வாரிய பாடத்திட்டத்தின் கீழ் வரும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணையை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுவிட்டது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், பெற்றோரும் இருந்து வந்தனர்.

சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நேற்று அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி நடைபெற இருப்பதாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்து இருக்கிறார்.அந்த வகையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி தொடங்கி, மார்ச் மாதம் 13-ந்தேதி வரையிலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 2-ந்தேதி வரையிலும் நடக்க உள்ளது.அனைத்து தேர்வுகளும் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், சில தேர்வுகள் பிற்பகல் 12.30 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.


Next Story