பேரூராட்சி செயல் அலுவலர் மீது தலைவர், கவுன்சிலர்கள் புகார்


பேரூராட்சி செயல் அலுவலர் மீது தலைவர், கவுன்சிலர்கள் புகார்
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:45 PM GMT)

குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மீது தலைவர், கவுன்சிலர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

தேனி

குச்சனூர் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கவுன்சிலர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "நான் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக உள்ளேன். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் என்னுடைய கையெழுத்து இல்லாமல் பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை உதவியாளர் ஆகியோர் அதிக செலவு செய்து அதற்கான செலுத்து சீட்டை கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளனர். என்னுடைய அனுமதியின்றியும், எனது கையெழுத்து மற்றும் தீர்மானம் இன்றியும் செலுத்துச்சீட்டு ஒப்படைக்கப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் அவர்கள் கூறுகையில், "பேரூராட்சியில் நடக்காத பணிகளுக்கு செலவு கணக்கு எழுதப்பட்டு முறைகேடு நடக்கிறது. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


Next Story