தர்மபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்


தர்மபுரி பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2022 7:45 PM GMT (Updated: 26 Oct 2022 7:45 PM GMT)

தீபாவளி பண்டிகை முடிவடைந்ததால் வெளியூர் செல்பவர்கள் குவிந்ததால் தர்மபுரி பஸ் நிலையத்தில் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தர்மபுரி

தீபாவளி பண்டிகை முடிவடைந்ததால் வெளியூர் செல்பவர்கள் குவிந்ததால் தர்மபுரி பஸ் நிலையத்தில் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை நாட்கள்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை கடந்த 24-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்கு முன்னதாகவும், பண்டிகை முடிந்து மறுநாளும் என தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த பண்டிகைக்காக 2 வெளியூர்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிற மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று இருந்தனர்.

இந்த நிலையில் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை வெளியூரில் இருந்து வந்தவர்கள், பண்டிகை கொண்டாட வெளியூர் சென்றவர்கள் என அனைவரும் அவரவர் இருப்பிடங்களுக்கு செல்ல தொடங்கினர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர் சென்றவர்களை வழி அனுப்புவதற்கு வந்த வாகனங்களாலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தர்மபுரி பஸ் நிலையம்

மாவட்ட தலைநகரான தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை, பெங்களூரு, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு குடும்பம் குடும்பமாக சென்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான பென்னாகரம், அரூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, கடத்தூர், பொம்மிடி, மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான தர்மபுரி, மொரப்பூர், பொம்மிடி, பாலக்கோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் முக்கிய ஊர்களுக்கு சென்றனர்.


Next Story