தேரோட்டம்


தேரோட்டம்
x

அம்பை வாகைப்பதியில் தேரோட்டம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் தை மற்றும் ஆவணி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெற்று 11-ம் நாள் அன்று தேரோட்டமும் நடைபெறும். இது கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தைப்பெருந்திருவிழாவிற்காக கடந்த 3-ந் தேதி காலை கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சாமிக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் அனுமன், நாகம், பல்லக்கு, இந்திரன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.

பதினொரு நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மதியம் உச்சி படிப்பு மற்றும் அன்னப்பால் கஞ்சி தர்மமும், இரவு 7 மணிக்குமேல் அன்னதர்மம் நடைபெற்றது.

எட்டாம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்தாம் திருநாளான நேற்று முன்தினம் முந்திரிக் கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தன குடம், பால்குடம் எடுத்தல் மற்றும் அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பதினோராம் திருநாளான நேற்று வாகை பதியின் 50-வது தேரோட்டம் மாலை 4 மணிக்கு மேல்சிறப்பு செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான அன்பு கொடிமக்களும், வாகைபதி தொண்டர்களும், அய்யா வழி பக்தர்களும் கலந்து கொண்டனர். இரவு காளை வாகனத்தில் அய்யா பவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.


Next Story