மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா


பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

மகா மாரியம்மன் கோவில் திருவிழா

பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களிலும் காப்பு கட்டும் விழாவும் நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது.

இதையடுத்து 26-ந் தேதி இரவு மறு காப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடந்தது. 27-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெற்றது. நேற்று காலை திருத்தேரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்தனர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.

ஏராளமான பக்தர்கள்

இதில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இன்று (புதன்கிழமை) இரவு பொங்கல் மாவிளக்கு பூஜையும், நாளை (வியாழக்கிழமை) அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story