மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரி காத்த ராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் ராமர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வந்தார்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய தேரில் ராமர், ஸ்ரீதேவி, பூ தேவி ஆகியோருடன் எழுந்தருளினார். இதையடுத்து, பக்தர்கள் அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

4 மாட வீதிகள் வழியாக சென்று தேரடி தெரு, சூனாம்பேடு சாலை, ஹாஸ்பிடல் சாலை, தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேர் சென்ற பாதைகளில் பொதுமக்களுக்கு அன்னதானம், மோர், சர்க்கரை பொங்கல் வழங்கினர். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் மதுராந்தகம் நகராட்சி தலைவர் மலர் விழிக்குமார், நகர மன்ற ஆணையாளர் அருள் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story