ஏலச்சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றியதம்பதிக்கு 2 ஆண்டு ஜெயில்


ஏலச்சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றியதம்பதிக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:47 PM GMT)

ஏலச்சீட்டு பணத்தை திருப்பி தராத தம்பதிக்கு 2 ஆண்டு ஜெயில் என்று தேவகோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிவகங்கை

தேவகோட்டை

ஏலச்சீட்டு

தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 55). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(55). இவரது மனைவி ரேவதி (50). செல்வம் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டில் சேர்ந்து சிவகுருநாதன் பணம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல் செல்வம் மனைவி ரேவதி நடத்தி வந்த ஏலச்சீட்டிலும் இவர் ரூ.1 லட்சம் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்டிய பணத்தை இருவரும் திருப்பி தரவில்லை.

2 ஆண்டு ஜெயில்

இதையடுத்து சிவகுருநாதன், செல்வம் மற்றும் அவரது மனைவி பணத்தை தராமல் மோசடி செய்து மிரட்டியதாக வேலாயுதபட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம், ரேவதி ஆகிய இருவர் மீதும் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில் வேலவன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிமுத்து, குற்றம் சாட்டப்பட்ட செல்வம், அவரது மனைவி ரேவதி ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்டவில்லை எனில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story