செல்லியம்மன் கோவில் தேரோட்டம்


செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:47 PM GMT)

தியாகதுருகம் அருகே 28 ஆண்டுகளுக்கு பிறகு செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே கூந்தலூர் ஊராட்சியில் பிரசித்திபெற்ற ஊராளியப்பன், செல்லியம்மன் மற்றும் முனியப்பன் ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஊராளியப்ப சாமியிடம் பூ போட்டு அப்பகுதி மக்கள் உத்தரவு கேட்டு திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 1994-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. ஆனால் அதன் பின்னர் சாமியிடம் இருந்து உத்தரவு கிடைக்காததால் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் உத்தரவு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 27- ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோவிலில் திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்றது.

மேலும் ஊராளியப்பன் மற்றும் முனியப்பன் சாமிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஊராளியப்பனுக்கு திருக்கல்யாணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

அபிஷேகம்

இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால் கூந்தலுர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story