செங்கல்பட்டு: துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டு பாய்ந்து சிறுவன் காயம்


செங்கல்பட்டு: துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டு பாய்ந்து சிறுவன் காயம்
x
தினத்தந்தி 4 Jan 2024 6:37 AM GMT (Updated: 4 Jan 2024 8:51 AM GMT)

காயமடைந்த சிறுவன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு ,

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் எனும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனும் பயிற்சி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் தவறுதலாக துப்பாக்கியை இயக்கியுள்ளார். இதனால் அவரது பின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தவறுதலாக துப்பாக்கியால் சுடும் போது குண்டானது திரும்பி வந்து அவரது தலையை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story