'அகவிலைப்படி' - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


அகவிலைப்படி - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 24 Sep 2022 12:28 PM GMT (Updated: 24 Sep 2022 12:30 PM GMT)

அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்து நவ.25-ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க 2015-ல் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், 4 முறை அகவிலைப்படி உயர்த்தியபோதும், ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தரவில்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அகவிலைப்படி வழங்க மறுத்ததால் 86,000 ஓய்வூதியதாரர் - 20,000 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் நிலையில் தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சமானது எனவும் மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை எனவும், போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதால் அகவிலைப்படி தர ரூ.81 கோடி செலவாகும் எனவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியை காரணமாக் கூறும் அரசு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது எப்படி என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்து நவம்பர் 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது


Next Story