மனைவியை அழைத்து வந்தால்தான் கீழே இறங்குவேன் - செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த கொத்தனார்


மனைவியை அழைத்து வந்தால்தான் கீழே இறங்குவேன் - செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த கொத்தனார்
x
தினத்தந்தி 4 Aug 2022 11:08 AM GMT (Updated: 4 Aug 2022 11:15 AM GMT)

திருவொற்றியூர் அருகே மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வடிவுக்கரசி(37). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கொத்தனார் செந்தில் குமார் அடிக்கடி குடித்து விட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவாராம். இதனால் கடந்த மாதம் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

பலமுறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வராததால் பிரிந்து சென்ற தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அவர்கள் சேர்த்து வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செந்தில் குமார் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே உள்ள 200 அடி பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு காலை 6 மணியளவில் செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரான் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் செந்தில்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது செந்தில்குமாரிடம் அவரது மனைவியோடு பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் மனைவியை அழைத்து வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி கீழே இறங்க மறுத்து விட்டார். இதனையடுத்து மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கத்தில் இருந்த செந்தில்குமார் மனைவியை போலீசார் அழைத்து வந்தனர்.

மனைவியை பார்த்தவுடன் செந்தில்குமார் கீழே இறங்கி வந்தார். பின்னர் அவருக்கு மனநல ஆலோசனை வழங்க எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story