செக் மோசடி வழக்கு: தண்டனையை எதிர்த்து திரைப்பட இயக்குனர் லிங்குசாமி மேல்முறையீடு - நாளை விசாரணை


செக் மோசடி வழக்கு:  தண்டனையை எதிர்த்து திரைப்பட இயக்குனர் லிங்குசாமி மேல்முறையீடு - நாளை விசாரணை
x

கோப்புப்படம்

செக் மோசடி வழக்கில் தண்டனையை எதிர்த்து திரைப்பட இயக்குனர் லிங்குசாமி செய்த மேல்முறையீடு தொடர்பாக ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

சென்னை,

திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது. அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 35 லட்சத்தை காசோலையாக அவர்கள் திருப்பி வழங்கினர்.

அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்தது. அதையடுத்து லிங்குசாமி, அவரது சகோதரர் மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு, கீழ்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.


Next Story