செஸ் ஒலிம்பியாட் போட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகள் தீவிரம் - கலெக்டர் ஆய்வு


செஸ் ஒலிம்பியாட் போட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகள் தீவிரம் - கலெக்டர் ஆய்வு
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக போட்டி நடைபெற உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் 10 ஏக்கர் நிலத்தில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் போட்டி நடைபெற உள்ள ஓட்டல் வளாகத்தை ஆய்வு செய்தார். அங்கு ஒவ்வொரு வாகனமும் இடையூறின்றி நிற்கவும், வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் எப்படி வெளியேறுவது, அதற்கான வழிகளை எப்படி ஏற்படுத்துவது என்று வரைபடம் மூலம் அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.

மேலும் திருட்டு சம்பவங்கள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கும் வகையில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசண்முகசுந்தரம், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேஷ், மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story