செஸ் ஒலிம்பியாட்: பதக்கங்கள் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


செஸ் ஒலிம்பியாட்: பதக்கங்கள் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கும் தலா ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

95 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் (ஜூலை) 29-ந் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 1,736 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 2 வார காலமாக 11 சுற்றுகளாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி திருவிழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்தியாவின் 2-வது அணி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் ஆனது. வெள்ளிப்பதக்கத்தை ஜார்ஜியாவும், வெண்கலப்பதக்கத்தை இந்தியாவின் 1-வது அணியும் பெற்றது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கங்கள் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கும் தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவில் இந்திய பி அணியும் , பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணியும் என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணிக்கும் ( பெண்கள்) ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ. 1 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story