சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் துவக்கம்


சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் துவக்கம்
x
தினத்தந்தி 25 Jun 2023 2:33 AM GMT (Updated: 25 Jun 2023 3:53 AM GMT)

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடலூர்

சிதம்பரம்,

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 21-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பக்தர்கள் வடத்தை பிடித்து இழுக்க நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் கீழ வீதியில் இருந்து புறப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சாலைகளின் இரு புறமும் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்


Next Story