நடிகர் வடிவேலு தம்பி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


நடிகர் வடிவேலு தம்பி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், 'திரைக்கலைஞர் வடிவேலு அவர்களின் தம்பியான திரு. ஜெகதீஸ்வரன் (52) அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.' என தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் மறைவு:-

தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவருக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனத்தில் வசித்து வருகின்றனர். இவரது இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52). ஜவுளி வியாபாரம் பார்த்து வந்த இவர், காதல் அழிவதில்லை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ஜெகதீஸ்வரன் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் நோயின் பிடியில் இருந்து அவர் விடுபடவில்லை. தொடர்ந்து ஜவுளி வியாபாரத்தையும் கவனிக்க முடியாமல் வீட்டில் முடங்கினார்.

இந்த நிலையில் மதுரையை அடுத்த விரகனூரை அடுத்த ஐராவதநல்லூரில் மந்தையம்மன் கோவில் பின்புறமுள்ள ஒரு குடிசை வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்த ஜெகதீஸ்வரன் இன்று காலை காலமானார். இதுபற்றிய தகவல் நடிகர் வடிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமான ஜெகதீஸ்வரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

மறைந்த ஜெகதீஸ்வரன் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Next Story