மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள மன்மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள மன்மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 3 April 2024 5:51 AM GMT (Updated: 3 April 2024 7:09 AM GMT)

உங்கள் அறிவு மற்றும் தொலைநோக்கு பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியதற்காக அறியப்பட்ட மன்மோகன்சிங், 1991 அக்டோபரில் முதல்முறையாக எம்.பி. ஆனார்.

நரசிம்மராவ் அரசாங்கத்தில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார். 91 வயதாகும் மன்மோகன்சிங், இன்று தனது பதவி காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் ஓய்வு பெறவுள்ள மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங், 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அரசியல் வட்டாரத்தில் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், எங்களுக்கு உத்வேகம் அளித்தது.

உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நீங்கள் செல்லும்போது, இந்திய யூனியனுக்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பின் மூலம் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அறிவு மற்றும் தொலைநோக்கு பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story