தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
x

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

சென்னை,

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 91 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். தமிழ்நாட்டில் இருந்த 6 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகிய ஆறு பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள்" என்று கூறியுள்ளார்.


Next Story