ரூ.732 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ரூ.732 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Feb 2024 6:44 AM GMT (Updated: 17 Feb 2024 7:10 AM GMT)

பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அத்துடன், 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் ரூ.3.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டிடங்களையும் முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,374 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் 80 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 270 கட்டிடங்களை முதல் அமைச்சர் திறந்துவைத்தார்.

இன்போசிஸ் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் வழங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் 139 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி என மொத்தம் 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.


Next Story