தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்


தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 4 Sep 2023 9:14 AM GMT (Updated: 4 Sep 2023 10:29 AM GMT)

தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியின் அமமுக செயலாளர் பன்னீர்செல்வத்தின் தாயார் ரத்தினம்மாள் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த மேலும் மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காகவே ரத்தினம்மாள் உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்களும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு தற்போது நடைபெற்ற கொலைச் சம்பவமும் உதாரணமாக அமைந்துள்ளது.

காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர், தொடர்ந்து அரங்கேறி வரும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு

இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story