கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி திறந்து வைக்கிறார்


கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா;  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந் தேதி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 12 Jun 2023 7:15 AM GMT (Updated: 13 Jun 2023 2:04 AM GMT)

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.6.2023 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் என்று கூறினார். அதன்படி, தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 3 கட்டிடங்களை கொண்ட இந்த மருத்துவமனை, ஆயிரம் படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை ஜூன் 3-ந் தேதியன்று கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து திறப்பதற்கு அரசு திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லிக்கு சென்று சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஜூன் 5-ந் தேதியன்று நடக்கும் மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஜூன் 5-ந் தேதி சென்னைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவில்லை. ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் வெளிநாட்டில் பயணம் மேற்கொள்வதால் மருத்துவமனை திறப்பு விழாவை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ஜனாதிபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டது. அதன்படி அந்த விழா 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

சென்னைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 15-ந் தேதி வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் 15-ந் தேதி அவர் சென்னைக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது சென்னை வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனவே கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது.


Next Story