இறந்த தாயின் பிணத்துடன் தூங்கிய குழந்தைகள்


இறந்த தாயின் பிணத்துடன் தூங்கிய குழந்தைகள்
x
தினத்தந்தி 29 Jun 2023 5:36 PM GMT (Updated: 30 Jun 2023 6:41 AM GMT)

திருப்பத்தூர் அருகே தாய் இறந்தது தெரியாமல் அவரது பிணத்துடன் 2 குழந்தைகள் இரவு முழுவதும் தூங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்

வீடு திறக்கவில்லை

திருப்பத்தூரை அடுத்த தாதனவலசை கிராமத்தை சேர்ந்தவர் திருநாதன் (வயது 30). இவரது மனைவி கீதா (29). இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். திருநாதன் திருப்பூரில் தங்கி அங்குள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கீதா, தனது குழந்தைகளுடன் தாதனவலசையில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி இரவு கீதா, தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். 28-ந் தேதி காலை நீண்டநேரமாகியும் கீதாவின் வீடு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், கீதா வீட்டின் கதவை தட்டினர். அப்போது 2 மகன்கள் மட்டும் வந்து கதவை திறந்துள்ளனர்.

தாய் சாவு

தாய் தூங்கிக்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கீதா காலை நேரத்தில் நீண்ட நேரமாக தூங்குவது கிடையாது என்பதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று கீதாவை எழுப்பினர். ஆனால் கீதா எழுந்திருக்க வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

சோகம்

இதுகுறித்து கீதாவின் கணவருக்கு தகவல் தெரி விக்கப்பட்டு, திருநாதன் திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது தாய் இறந்தது தெரியாமல் இரண்டு குழந்தைகள் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story