சிறுமியிடம் சில்மிஷம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


சிறுமியிடம் சில்மிஷம்-  போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2022 6:45 PM GMT (Updated: 16 Oct 2022 6:45 PM GMT)

முகநூல் மூலம் நட்பாக பழகி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

தென்காசி

ஆலங்குளம்:

முகநூல் மூலம் நட்பாக பழகி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

முகநூல் பழக்கம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருடைய மகன் சோனாத் (வயது 21). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக சோனாத் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிறுமியை நேரில் பார்த்து பேசவேண்டும் என்று கூறி அவரை நேரில் அழைத்துள்ளார்.

சில்மிஷம்

அதனை நம்பிய சிறுமி ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சோனாத், ஆசை வார்த்தை கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சோனாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சோனாத்திடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.




Next Story