சின்னமனூரில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்


சின்னமனூரில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 2 July 2023 6:45 PM GMT (Updated: 2 July 2023 6:47 PM GMT)

சின்னமனூரில் சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தேனி

குமுளி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் நகராட்சி அமைந்துள்ளது. இங்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகரை சுற்றியுள்ள 15 உட்கடை கிராமங்களில் மையப் பகுதியாக சின்னமனூர் உள்ளது. இங்கு கிராமம், நகர்ப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகை தரும் பொதுமக்கள் போடி, ஓடைப்பட்டி, தேனி மற்றும் கம்பம் நெடுஞ்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கடைகள் அமைந்துள்ளன. மேலும் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சின்னமனூரில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story