சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு வைத்திருந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை பணி இடைநீக்கம் செய்து விழுப்புரம் சரக போலீ்ஸ் டி.ஐ.ஜி.பாண்டியன் உத்தரவிட்டார்
கள்ளக்குறிச்சி
அதிரடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கடத்தி சென்று விற்பனை செய்வோர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதில் கைதான சில வியாபாரிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் சாராய வியாபாரிகள் மற்றும் கடத்தல் காரர்களிடம் ரகசிய தொடர்பு வைத்துள்ள மற்றும் உடந்தையாக இருக்கும் போலீஸ்காரர்களையும் கண்டுபிடித்து அவர்களையும் களை எடுத்து வருகிறார்கள்.
பணி இடைநீக்கம்
இந்த நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு புகார் வந்தது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். இ்தை ஏற்று சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரை பணி இடைநீக்கம் செய்து டி.ஐ.ஜி.பாண்டியன் உத்தரவிட்டார்.