வீடுகள் தோறும் வாழ்த்து பாடல் பாடி கிறிஸ்தவர்கள் உற்சாகம்


வீடுகள் தோறும் வாழ்த்து பாடல் பாடி கிறிஸ்தவர்கள் உற்சாகம்
x

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல்கள் பாடும் நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல்கள் பாடும் நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல்

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் ஆண்டு தோறும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் குடில்கள் அமைப்பது வீடுகள் கடைகள் ஆலயங்கள் தோறும் அலங்கார விளக்குகள் அமைப்பது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து பாடல் குழுவினர் வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல்கள் பாடி வாழ்த்து தெரிவிப்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்கள், பெந்தேகொஸ்தே சபையினர், லுத்தர் மிஷன் சபையினர் என பல்வேறு கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்கள் வீடுகள் தோறும் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல்களை பாடி வருகிறார்கள்.

இந்த பாடகர் குழுவினர் இசை கருவிகளுடன் ஆண்களும் பெண்களுமாக இரவு நேரத்தில் வீடுகளில் வாழ்த்து பாடல்கள் பாடுகின்றார்கள். இந்த குழுவினருடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்கள் சென்று நடனமாடி குழந்தைகள், பெரியவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.


Next Story