கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தேவாலயங்களை புதுப்பிக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தேவாலயங்களை புதுப்பிக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 April 2023 7:00 PM GMT (Updated: 23 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்களை புதுப்பிக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புனரமைத்தல்

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.4 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு ரூ.6 லட்சமும் மானியத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

நிதியுதவி

இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

இந்த நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story