திருவொற்றியூரில் கட்டப்படும் மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கிய கழிவுநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்


திருவொற்றியூரில் கட்டப்படும் மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கிய கழிவுநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

திருவொற்றியூரில் கட்டப்படும் மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கிய கழிவுநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை மாநாகராட்சி முழுவதும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி உள்ள நிலையில், நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் தேங்கியநீரை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மழைநீர் வடிகால் கால்வாய்களில் தேங்கிய நீரை அகற்ற கோரி பொதுமக்கள் நேற்று திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியல் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டு மழைநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை லாரி மூலம் எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story