ஆவின் முகவர்களின் கோரிக்கைகள்பரிசீலித்து தீர்வு காணப்படும்


ஆவின் முகவர்களின் கோரிக்கைகள்பரிசீலித்து தீர்வு காணப்படும்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:33 PM GMT (Updated: 25 Jun 2023 6:52 AM GMT)

முகவர்களின் கோரிக்கைகள் பரிசீலித்து தீர்வு காணப்படும் என்று சங்க கூட்டத்தில் ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு கூறினார்

சேலம்

சங்க கூட்டம்

தமிழ்நாடு ஆவின் பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர்கள் சங்க கூட்டம் சேலத்தில் நடந்தது. சங்க மாநில தலைவர் அருணாசுந்தர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சேலம் ஆவின் பொது மேலாளர் விஜயபாபு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சேலம் ஆவின் முதல் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு ரூ.7 கோடி லாபம் பெற்று உள்ளது. 1 லட்சம் கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தபட உள்ளோம். சேலம் ஆவினில் தயாரிக்கப்படும் நெய்க்கு அதிக வரவேற்பு உள்ளது.

தற்போது ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஒவ்வொரு முகவரும், மக்களிடம் கொண்டு சேர்த்து விற்பனையை அதிகப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும். முவர்கள் வைத்து உள்ள கோரிக்கைகள் பரிசீலித்து தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனி நல வாரியம்

கூட்டத்தில் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஆவின் பால் முகவர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.

ஆவின் நிறுவனம் மூலம் குடிதண்ணீர் பாட்டில் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்த பால்வளத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில கவுரவ தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார். முன்னதாக தீர்மான நகலை சங்க உறுப்பினர்கள், பொதுமேலாளர் விஜயபாபுவிடம் வழங்கினர்.


Next Story