அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு.. 70 பேருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு


அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கு.. 70 பேருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு
x

கோப்புப்படம்

அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் வழக்கில், 70 பேருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200பேர் மீதும், ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீது என மொத்தம் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்கள் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 43 பேரும், ஒ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிமுக இரு தரப்பு மோதலில் ரூ.19,35,834 மதிப்புள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராயப்பேட்டை காவல் நிலைய வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜராம், விருகை ரவி, தியாகராயநகர் சத்யா, அசோக் உள்ளிட்ட 43 பேர் மற்றும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பு 27 பேர் என மொத்தம் 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story