10ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


10ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 10 May 2024 5:14 AM GMT (Updated: 10 May 2024 5:18 AM GMT)

ஜூலை 2-ம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.55 ஆக அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும்போல மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 3,96,152 பேரும், மாணவிகள் 4,22,591 பேரும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள், துணைத்தேர்வு எழுத நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதைபோல மறுகூட்டல்/ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மறுதேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story