மதுரவாயலில் ஏரியில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி - நண்பர்களுடன் குளித்தபோது சோகம்


மதுரவாயலில் ஏரியில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி - நண்பர்களுடன் குளித்தபோது சோகம்
x

மதுரவாயலில் நண்பர்களுடன் ஏரியில் குளித்த 8-ம் வகுப்பு மாணவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

சென்னை

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 13). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் பரத், தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஏரியில் குதூகலமாக குளித்து விளையாடினார்.

அப்போது திடீரென ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற பரத், நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், அவரை மீட்க போராடினர். ஆனால் அவர்களால் முடியாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தனர். பொதுமக்கள் வருவதற்குள் பரத், நீரில் மூழ்கி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள், ஏரியில் மூழ்கிய பரத்தை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பரத் ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story